தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிப் பாதை

0
879

சுரேஷ் ராஜசேகரன்

இன்று நாம் பல வகைகளில் பயன்படுத்துகின்ற தகவல் தொடர்பு நமது அன்றாட வாழ்வில் இன்றியமையாததாகிப் போனது. அறிவியல் சார்ந்த வாழ்க்கைக்கு மட்டுமல்லாது, எளிமையான வாழ்க்கைக்கும் இந்தத் தகவல் தொடர்பு என்பதே அடிப்படையாகிவிட்ட, இந்தத் தகவல் தொடர்பின் வளர்ச்சி, பயன்படுத்தும் கருவிகள் ஆகியனபற்றி காண்பதே இக்கட்டுரையின் சாரம்சமாகும். இன்று பல நாடுகளில் கணினி இல்லாத வீடே கிடையாது. இந்தியா போன்ற நாடுகளிலும் பயன்பாடு பெருமளவு அதிகரித்து விட்டது.

உலகத்தையே சுருக்கி நமது கைக்குள் கொண்டுவந்துவிட்ட அறிவியல் தந்த தொழில்நுட்பமே இணையம். உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ள புரவலர் கணினிகளில் பதியப்பட்டுள்ள செய்திகளை, தரவுகளை விரைவாகத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்காக தேடுபொறிகள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை தவிர தற்போது இணையத்தில் மிகவும் பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளவை சமுதாய வலைத்தளங்களாகும். கட்டற்ற களஞ்சியமாகக் குறிப்பிடப்படும் விக்கிப்பீடியா, முகப்புத்தகம், வலைப்பதிவு போன்றவை ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் பல்வேறு தகவல்களை ஒருசில நிமிடங்களில் உலகெங்கும் பரப்புவதில் இவை தனித்துவம் பெற்றும் திகழுகின்றன.

மின்னணுத் தொழில்நுட்ப வளர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தை ஒரு தலைமுறை என்பது, சொல்லப்போனால் 3 முதல் 5 ஆண்டுகளை மட்டுமே குறிக்கின்றது என்றே தோன்றுகிறது. முதல் தலைமுறை தொழில்நுட்பம் என்று குறிப்பிடப்படும் கம்பி வழி தொலைபேசி வசதி பல ஆண்டுகள் புழக்கத்தில் இருந்தது.

ஆனால் 2ம் தலைமுறை கருவியாக செல்பேசி, காற்றுவழி மின்காந்த அலை மூலம் தொடர்பை ஏற்படுத்தி செயல்பட உருவாக்கப்பட்டது. இது அறிமுகப்படுத்தப்பட்ட 10 ஆண்டுகளுக்கு உள்ளாக, 3ம் தலைமுறை அலைவரிசையும், அதனை பயன்படுத்தும் செல்பேசி கருவியும் உருவாக்கப்பட்டுவிட்டன. தற்போது நான்காம் தலைமுறை தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. சிலநாடுகளில் ஐந்தாம் தலைமுறை இருந்தாலும், இந்தியா 5ஐ தவிர்த்து ஆறாம் தலைமுறைக்கு தயாராகிறது. செல்பேசி வழியாக இணையம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றன. தொலைக்காட்சி வழியாக இணையத் தொடர்பு கிடைக்கவும் செய்கின்றன. என்றாலும் கணினி வழியாகவும், செல்பேசி வழியாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது என்பது தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுகிறது.

கம்பிகள் மூலமாக தரைவழித் தொடர்பு, காற்றுவழித் தொடர்பு என்று வளர்ந்த தொழில்நுட்பம், இன்று பூமிக்கு வெளியே, வான்வெளியில் தனித்து நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கோள்கள் வழியே செயல்படுத்தப்படுகிறது. இன்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செயற்கைக் கோள்களை இதற்காக விண்ணில் செலுத்தியது. இதனால் நாடுவிட்டு நாடு என்பது மறைந்து, கண்டம் விட்டு கண்டம் பரிமாற்றம் செய்து கொள்ளுவது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது.

சில காலத்திற்கு முன்பாக இந்தக் கருவிகள் எங்கே இருந்தன? இந்தக் கருவிகள் அனைத்தும் அவற்றிற்கான மூலப் பொருட்களாக, இயற்கையுடன் இணைந்திருந்தன. நிலத்திற்குள்ளிருந்து எடுக்கப்பட்ட தாது எண்ணெய், காற்று, காந்தம், இவற்றுடன் மின்சக்தி சேர்ந்து இன்று இந்தக் கருவிகளாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன. இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைந்தது, தொலைத் தொடர்பு வளர்ச்சியாகும். தொலைபேசி, செல்பேசி, தொலைநகல், கணினி தொழில்நுட்பம், இணையம் என்று உருவாக்கப்பட்டுள்ள அத்தனை வசதிகளும் தாமதம் என்பதைத் தவிர்த்து வேகம் என்பதை கொடுத்துவிட்டன.

இயற்கை காட்டிய எதிரொலி இன்று பல்வேறு வகைகளில் வளர்ச்சியடைந்துவிட்டது. தகவல் தொடர்பு என்பது மனித நாகரீகத்தின் அடிப்படையாக மாறிவிட்டது. அதனால் தானோ என்னவோ இன்று சாலையில் நடந்து செல்லும், எளிமையான, ஏழ்மையான மனிதர்களும் செல்பேசியை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு வந்துள்ளனர். காற்றுவழியாக அனுப்பப்படும் செல்பேசிக்கான மின்காந்த அலைகள் மனித உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கின்றது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவருகிறது. ஒருபுறம் தகவல் தொடர்பு வேகமாக வளர்ந்தும் வருகிறது.

மனிதகுலத்திற்கு வேகமான தகவல் பரிமாற்ற வழிமுறைகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. முகம்பார்த்து பேசும் வசதியை மூன்றாம் தலைமுறை அலைவரிசை கொடுத்துவிட்டது. அடுத்து வரப்போகும் அலைவரிசைகள் ஆளையே நேரில் நிறுத்தினாலும் வியப்படைவதற்கில்லை. ஆனால் அது நிச்சயம் மற்ற உயிரினங்களின் அழிவிற்கும் ஆரம்பமாக அமையும் என்றும் சொல்லலாம். அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இருந்த டைனோசார்களே ஏதோ ஒரு காரணத்தால் இந்த பூமியிலிருந்து மறைந்து போய்விட்டன. அப்படியென்றால், வெய்யில் கொஞ்சம் அதிகமாக அடித்தாலே தாங்காத மனிதனும் மற்ற உயிரினங்களும், இந்தப் பூமியில் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கப்போகின்றன. தொலைத் தொடர்பு வசதிகளுக்காக நாம் தொலைத்துள்ளவையும் தொலைக்கப் போகின்றவையும் ஏராளம். உலகில் முதல் 5ஜி அலைவரிசை கொண்டுவந்த இடம் சீனாவின் உகான் மாநிலம் என்பதும் திகிலூட்டுகிறது.

இவை ஒருபுறமிருக்க தகவல் தொடர்பு துறையில் வரும் காலங்களில் நமக்கு சாதகமாக்கிகொள்ள என்னென்ன துறையில் பயிலவேண்டும் என்றும் பாப்போம். நீங்கள் ஒரு தொழில்நுட்ப வல்லுநராக புதிய தொழில்நுட்பத்தைத் கற்றுகொண்டே இருக்க வேண்டும். இயக்க முறைமைகள் மற்றும் சேவையக மென்பொருளைப் பயன்படுத்துவதையும் நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். கணணி மற்றும் கணிப்பொறியில் லினக்ஸ், அப்பாச்சி, ஓபன்எஸ்எஸ்எல், விண்டோஸ் சர்வர், ஆரக்கிள், மைஎஸ்க்யூஎல் மற்றும் மைக்ரோசாஃப்ட் எஸ்.கியூ.எல் சர்வர் ஆகியவை இதில் அடங்கும்.

ஒரு தொழில்முறை மென்பொருள் உருவாக்குபவராக, பள்ளியில் நீங்கள் கற்றுக் கொண்டதைவிட அதிகமான நிரலாக்கங்களை கற்பிக்க வேண்டும். சில பள்ளிகள் ஒன்று அல்லது இரண்டு நிரலாக்க மொழிகளை மட்டுமே அறிந்த பட்டதாரிகளை உருவாக்குகின்றன. இவை பொதுவாக சி++, பைதான் அல்லது ஜாவா. சி++ பற்றிய அறிவு தவிர பெரும்பாலான கார்ப்பரேட் நிரலாக்க வேலைகளுக்கு உங்களுக்கு தகுதி இருக்காது. ஒரு தொழில்முறை மென்பொருள் உருவாக்குநராக மாற நீங்கள் மற்ற நிரலாக்க மொழிகளை அறிந்திருக்க வேண்டும். இதில் HTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட், MySQL, PHP, பைதான் மற்றும் ஜாவா ஆகியவை அடங்கும்.

தரவு பகுப்பாய்வு மூலம் செயல்பாட்டு நுண்ணறிவுகளால் ஆதரிக்கப்படும் கிளவுட் அடிப்படையிலான ஐடி இன்ஃப்ராவை நோக்கி ஐடி நிறுவனங்கள் மாறுவதால், இதற்கேற்ப பெரும்பாலான ஐடி கண்காணிப்பு போக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேகக்கணிணி சூழல்களை சிறந்த கண்காணிப்பு கருவிகள் ஆதரிக்கின்றன. இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் சில செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறையிலும் மற்றும் பிக்டேட்டா என்று சொல்லகூடிய பெரியதரவுகள் போன்ற தகவல் நுட்பத்தில் பெரும் அடையாளத்தை உருவாக்கியுள்ளன.

இன்றய சூழலில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் இலகுவாக பொருட்கள் பெற உதவுகின்றன. இவை மேற்கூறிய தொழில்நுட்பத்தில் உருவாகின. மேலும் கூகிள்பே, பேடிஎம் இக்கட்டான நேரத்திலும் பணபரிமாற்றத்தை எளிதாக செய்கிறது. டிஜிட்டல் நாணய மின்னணு கட்டணம் மிகவேகமாக பரவுகிறது. கிரிப்டோகரன்சியும் சீனா போன்ற நாடுகளில் நடைமுறையில் வந்துகொண்டிருக்கிறது. மருத்துவத்துறையில் வேறுபரிணாமத்தில் 3D முறையில் பார்த்தே நோயாளிக்கு சிகிச்சை அளிக்கமுடிகிறது. நரம்பியல்இணைப்பு என்று சொல்லகூடிய நியுரோலிங்க் சிலநோய்களை குணமாக்கவும் மற்றும் மனதின் எண்ண ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும் என்றும் சொல்கிறார்கள். இப்படி தகவல் தொடர்பு வளர்ச்சி நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே இருகின்றது.

Leave a Reply