சித்த மருத்துவம் – வாழ்வியல் கோட்பாடு

சித்த மருத்துவர் வேலாயுதம் BSMS, MD(Siddha), Ph.D., MBA(HM)

0
1283

நோயற்ற வாழ்வே நிறைவான வாழ்வை வழங்கும் செல்வம். நம் முன்னோர் மண்ணுக்கேற்ற சில பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்ததுடன், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அதனால் ஆரோக்கியமாக இருந்தனர். சித்த மருத்துவம் என்பது நமது மண்ணுக்கும் மரபுக்கும் ஏற்ற ஒரு மருத்துவம். இதை மருத்துவம் என்பதைவிட ‘வாழ்வியல் கோட்பாடு’ என்றே சொல்லலாம். இவற்றை நாம் மறந்துபோனதால்தான், நோய்கள் பெருகி வருகின்றன. குறிப்பாக, இயற்கைக்கு முரணான வாழ்வியல் மாற்றங்களால் சர்க்கரைநோய், குழந்தையின்மை, புற்றுநோய், நுரையீரல் தொடர்பான நோய்களும் குறைபாடுகளையும் நம்மை வதைக்கின்றன.

“எதிர்காலத்தில் இந்தியர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையால், கிருமிகளால் பரவக்கூடிய தொற்று நோய்களைவிட (Communicable Disease), `லைப் ஸ்டைல் டிசீசஸ்’ (LifeStyle Diseases) எனப்படும் வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் நோய்களால்தான் அதிக மரணங்கள் நிகழும்” என்ற உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையே இதற்கு சாட்சி.

தொற்றாநோய்கள் பெருக அடிப்படைக் காரணமாக இருப்பது நம் வாழ்க்கைமுறைதான். வாழ்க்கைமுறையை மாற்றாமல் நோய்களைக் கண்டறிவதும், சிகிச்சை அளிப்பதும் பயனற்ற வேலை. சித்த மருத்துவம், நோயற்ற வாழ்வு அமைய, நோய் வராமல் தடுப்பதும் மருத்துவத்தின் ஓர் அங்கம் என்கிறது.

இதையே திருமூலர்,

“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்

மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும்

மறுப்பது இனிநோய் வாரா திருக்க

மறுப்பது சாவை மருந்தென லாமே” என்று திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார்.

உடல் நோயைத் தடுக்கவும், மன நோயை நீக்கவும், நோய் வராமல் காக்கவும், மரணத்தை எதிர்த்துப் போராடி, பெருவாழ்வை வழங்க வேண்டும். அவ்வாறு அமையக்கூடியதே மருத்துவம் என்கிறது என்கிறது திருமூலரின் மருத்துவம் குறித்த வரையறை. அதாவது மருத்துவம் என்பது, நோய்களைத் தீர்ப்பது மட்டுமல்ல, நோய் எதனால் வருகிறது என்று அதன் மூலத்தைக் கண்டறிந்து, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் மூலம் அது தலைதூக்காமல் சரிசெய்வதும் நமது பாரம்பர்ய மருத்துவத்தின் சிறப்பு. அதற்கு அடிப்படை சித்த மருத்துவம் வகுத்த ஆரோக்கியமான வாழ்வியல் கோட்பாட்டை பின்பற்றுவதே.

இன்றைய நவீன மருத்துவ ஆய்வுகள் இதைத்தான் உண்மை என்று மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக, வாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் காரணம், நமது உடலின் உயிரியல் கடிகாரமும் (Biological Clock) சர்காடியன் இசைவும் (Circadian Rhythm) பாதிக்கப்படுவதுதான் என்கிறது நவீன அறிவியல். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சித்த மருத்துவம் ‘நோயில்லா நெறி’ அல்லது ‘நோய் அணுகா விதி’ என்ற கோட்பாட்டில் கால ஒழுக்கம், நாள் ஒழுக்கம் ஆகிய நெறிமுறைகளை வகுத்துள்ளது. ஒருவர் அவற்றை சரியாகப் பின்பற்றினால் நோய் நெருங்கா வாழ்வு நம் வசமாகும்.

முதலில் நாள் ஒழுக்கத்தையும் அதன் பிறகு கால ஒழுக்கத்தையும் இந்த தொடரில் பார்ப்போம். நாள் ஒழுக்கத்தில் நாம் தினமும் படுக்கையில் இருந்து எழுந்து மீண்டும் படுக்கைக்குச் செல்லும்வரை ஒருநாள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது சித்த மருத்துவம். அதன்படி, அதிகாலை விழித்தெழுதலின் அவசியம் பற்றி இந்த இதழில் பார்ப்போம்.

அதிகாலை விழித்தெழுதல்!

ஒவ்வொரு நாளின் தொடக்கமும் கண் விழிப்பதிலிருந்தே தொடங்குகிறது. காலையில் கண் விழிப்பது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய பிறப்பு. அந்த நேரத்தில் நிலவக்கூடிய ஒரு மனிதனின் புறச்சூழலும் அகச்சூழலுமே அன்றைய தினத்தை தீர்மானிக்கின்றன. அதிகாலை விழிப்பதன் பின்னணியில், நோய்களைப் போக்கும் அறிவியல் உண்மை இருக்கிறது.

புவியியல் அமைப்பில் உலக அளவில் ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு நேரம் காட்டும் கடிகாரம் இருப்பதுபோல, உடல் இயக்கத்துக்கென ஒரு கடிகாரம் இருக்கிறது. இதையே நவீன மருத்துவம் உடலின் ‘உயிரியல் கடிகாரம்’ (Biological Clock) என்றும், அந்தக் கடிகாரம் சரியாக இயங்கவில்லை என்றால், உடல் இயக்கமே தலைகீழாக மாறிவிடும் என்றும் கூறுகிறது. இதைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

`அண்டத்திலுள்ளதே பிண்டம்

பிண்டத்திலுள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமு மொன்றே

அறிந்து தான் பார்க்கும் போதே’ என்பது சித்தர் பாடல்.

அதாவது இந்தப் பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என இவற்றின் பிரதிபலிப்பு ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது. அதன்படி ஒருவர் தன்னுடைய நாளை அந்தப் புவியியல் அமைப்பின்படி தொடங்க வேண்டும். பூச்சிகள், பறவைகள், விலங்குகள் விழித்தெழுவது, மலர்கள் மலர்வது என உயிர்களின் தொடக்கச் செயல்பாடு சூரியச் சுழற்சிக்கேற்ப அதிகாலையில்தான் நடக்கிறது. எனவே, மற்ற உயிர்களைப் போல, நாமும் அதிகாலை நேரத்தில்தான் கண் விழிக்க வேண்டும். அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன் தூக்கத்திலிருந்து எழுவதால், உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

உடலுக்கு ஆதாரமாக விளங்கும் வாத, பித்த, கபம் போன்ற உயிர் தாதுகள் தங்களுடைய நிலையிலிருந்து மாறும்போது நோய் உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம். வெப்பக்காற்று இல்லாமல் அதிகாலையில் பூமி குளிர்ந்திருக்கும். வளர்சிதை மாற்றங்கள், பல்வேறு செயல்பாடுகள் காரணமாக உடலில் அதிகரித்துள்ள பித்தம் இதன்மூலம் குறையும். சுற்றுச்சூழல் துறை புள்ளிவிவரப்படி, காற்று மாசு, ஒளி மாசு போன்ற பாதிப்புகள் நேரம் செல்லசெல்லக் கூடிக்கொண்டே போகும். அதனால் இந்த பாதிப்புகள் குறைவாக உள்ள காலை நேரத்தில், சுத்தமான ஆக்சிஜன் நிறைந்திருக்கும். அப்போது ஆழமாக மூச்சை உள்வாங்கும்போது நுரையீரலின் அடிப்பாகம் வரை சென்று தூயக்காற்றால் நிரம்பும். அந்த தூய ஆக்சிஜன் ரத்தம் மூலம் ஒவ்வோர் உறுப்புகளையும், அதிலுள்ள செல்களையும் சென்றடையும். நிணநீர் மற்றும் நரம்புகளின் செல்களுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். அதிக சத்தமின்றி காணப்படும் அந்தச் சூழலில் உறக்கம் கலைவது மனதுக்கு இதம் தரும். இதனால் குழப்பமில்லாத தெளிவான மனநிலை உண்டாகும்.

அதேபோல, கண் விழிக்கும்போது, நேர்மறையான எண்ணங்களை தரக் கூடியவற்றைப் பார்க்கவேண்டும். குறிப்பாக, சூரிய உதயத்தைப் பார்ப்பது, மலர்களைப் பார்ப்பது, கனிகளைப் பார்ப்பது, கண்ணாடியில் முகம் பார்ப்பது, மனைவி மக்களைப் பார்ப்பது, உள்ளங்கையைப் பார்ப்பது ஆகியவை உளவியல்ரீதியாக நம்மை நெறிப்படுத்தும். அந்தநாள் முழுக்க சிறப்பான நாளாக அமையும்.

அதிகாலை 4.30 முதல் 6.30 மணிக்குள்ளான நேரத்தை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்பார்கள். ‘பிரம்மம்’ என்றால் ‘தொடக்கம்’ என்று பொருள். ‘முகூர்த்தம்’ என்பதற்கு ‘நல்ல நேரம்’ என்று பொருள். உன் நாளை நல்ல நேரத்தில் தொடங்கினால், அன்றைய நாள் நன்றாக முடியும் என்பதே அதற்கான பொருள். எனவே, தினமும் கண்விழிக்கும் நேரத்தை, பிரம்ம முகூர்த்தமான அதிகாலையில் தொடங்கினால், அந்த நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.

சித்த மருத்துவர் வேலாயுதம் BSMS, MD(Siddha), Ph.D., MBA(HM)

Leave a Reply