கனவை வென்றவன்

மாயன் மெய்யறிவன்

0
226

யாருக்குத்தான் இல்லை கனவு.
குழந்தைக்கும் உண்டு
இளமைக்கும் உண்டு
முதுமைக்கும் உண்டு
கனவிற்கு ஏது வயது?

கனவுகள் இல்லாமல்,
யாரும் வாழத்தான் முடியுமா?
ஏன் பிறந்தோம்,
என்பதற்கு ஏது விடை?
எப்படித் தோன்றுகிறது கனவு,
என்பது புதிரின் ஊற்று தானே?

கடவுள்கள் அத்துணையும்,
நமது கனவு தானே?
வேண்டுதல்கள் அத்துணையும்,
மெய்ப்பிக்கத் தானே?

கண்டுபிடிப்புகள் அத்துணையும்,
நமது கற்பனைகள் தானே?
இது,
கனவுகளின் தொடர்ச்சி தானே?

நீயும் ஓர் கனவு
நானும் ஓர் கனவு
நாம் எல்லோருமே,
பெற்றவர்களின் கனவு தானே?

லிங்கத்தின் கனவு,
ஆவுடையில் நுழைந்து
கருவென வளர்ந்து,
உயிரெனத் தரிக்கும்
மற்றொரு கனவு தானே?
முழுமுதற் கனவு,
லிங்கத்தின் கனவா?
என்பதை எவர் அறிவாரோ?

கனவுகள் எல்லாமே,
மற்றொரு கனவைத் தானே தரிக்கின்றன?
எனில்,
இந்த உலகம் கனவுகளால் ஆனது தானே?
எனில்,
நல்ல கனவுகள் பிறக்கட்டும்
நல்ல கனவுகள் வெல்லட்டும்.

திக்கெங்கும்
கனவை வென்றவன் காண்பது,
சிவமெய்ப்பொருள்.

மாயன் மெய்யறிவன்

Leave a Reply