ஆசிரியத்துவம்

புயல் பெ.ஸ்ரீகந்தநேசன், இலங்கை (எழுத்தாளர், ஆய்வாளர், ஆசிரியர்)

0
185

“இவள எவளவோ கஷ்டப்பட்டுப் படிக்கவைச்சு டீச்சராக்கினான். கடைசியில இவள் பள்ளிக்கூடத்தில போய் தானும் தண்டபாடும் என்று நடக்காம முப்பத்திரண்டு வயசு ஆகியும் கலியாணம் கட்டாம, ஏதோ தான் மட்டுமே பிள்ளைகளுக்குப் படிப்பிக்கிற மாதிரி எந்த நாளும் பொழுது சாயேக்கத்தான் வீடு வருகிறாள். ஒழுங்கா மத்தியான சாப்பாடு சாப்பிடுறதுமில்லை. இவளிண்ட அப்பாவும் மூட்டை தூக்கி உழைக்கற காசெல்லாம் குடி குடியென குடிச்சு இப்ப பாரிசவாதம் வந்து படுத்தப் படுக்கையாய் கிடக்கிறார். எனக்குத் தங்கத்தில் தாலி போடவில்லை என்றாலும், மஞ்சள் கயிறால தாலி கட்டினார் என்பதற்காக இப்ப ஆக்கிப்போடுறன். இவள் உழைக்கிற காசுல கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் பிடிச்சு வைச்சிருந்தா இப்ப பத்து லட்சம் தேறியிருக்கும். அந்த பணத்தைக் கொடுத்துக் கிடுத்து தோட்டக்காரன் தரணிக்குச் சரி பேசி கட்டிக்கொடுத்திருக்கலாம். இவள் என்னவென்றால், கட்டறுத்த ஆட்டுக் குட்டி மாதிரி பிள்ளைகளுக்குப் படிப்பிக்கிறன், படிப்பிக்கிறனென்று பள்ளிக்கூடத்திற்கு விடிஞ்சும் விடியாத பொழுது ஓடிப்போய் என்னத்தைப் பிடிங்கினாள். எனக்கும் அறுபது வயசாகிறது. இவள் எவ்வளவு காலந்தான் இப்படி துணையில்லாம தனியாக இருக்கப் போறாள். இந்த கண்டறியாத போரினால், என்ர மூத்த மகன் மதியும் காணாமல் போய்ப் பத்து வருசமாச்சு. அவன் இப்ப இருக்கானோ, இல்லையோ தெரியாது. இன்றைக்கு அவன்ர முப்பத்தெட்டாவது பிறந்த நாள் பாவம் பிள்ளை எங்க எப்படியிருக்கோ தெரியாது. கோவிலுக்குப் போய் அவனுக்கு அர்ச்சனை செய்திட்டு வருவம்” என ரஞ்சிதா ஆசிரியரின் தாய் சிவகாமி புறுப்புறுத்துக்கொண்டு வலக்கையால், கழிந்த ஓலைப் பாயைச் சுற்றியவாறு இடக்கையால் அரிதட்டாய்ப் போன போர்வையைச் சுருட்டியவாறு கண்களைச் சிமிட்டியவாறு வீட்டு வாசற் பக்கம் பார்வையைச் சிதறவிடுகிறாள்.

பாடசாலைக்குச் செல்ல, சேலை கட்டி ஆயத்தமாகிய ரஞ்சிதாவைச் சுற்றி நாவற்பழத்தைச் சுற்றி எறும்புக் கூட்டம் மொய்த்த மாதிரி ஆண் காவற்துறையினரும் பெண் காவற்துறையினரும் விசாரணை மேல் விசாரணை நடத்தி தங்கள் அதிகாரத்தைக் காட்டினார்கள். நூறு மீற்றர் தூரத்தில் உள்ள சிவகாமியம்மையின் காதுகளுக்கு அவர்கள் வாதாடிக் கொண்டிருப்பது எதுவும் தெளிவாக வந்து விழவில்லை. ஏதோ தன்னுடைய மகளிடம் காவற்துறையினர் கேட்பது போல அவளுக்கு இருந்தது. தடித்த கறுத்த ஒரு பெண் காவற்துறை அதிகாரி திடீரென்று ரஞ்சிதா ஆசிரியரின் கரங்களில் விலங்கினை மாற்றி, ஆசிரியர் ‘இல்லை, இல்லை’ என கதற கதற இழுத்துச் சென்று, ‘ஜீப்’ வண்டியில் ஏற்றினாள்.

“அம்மா ரஞ்சிதா உண்ட நல்ல மனசுக்கு என்னவம்மா இப்படியெல்லாம் நடக்குது. ஊரே எங்கள பார்த்து தப்பா கதைக்கப் போகுது. இந்த பொலிஷ்காரர்களுக்கு என்ன வேண்டுமாம்? ஒழுங்கான ஆம்பளை இல்லாத வீடுணு இடம் கண்டுட்டாங்களா?” முணுமுணுத்தவாறு வாசற் படியைத் தாண்டி படலை அடிக்கு தள்ளாத வயதிலும் ஓடோடி வந்தாள். அரைவாசி சுற்றிய பாயும் கால்வாசி சுருட்டிய போர்வையும் ஏதோ கதை சொல்ல அழைத்தது போல அவற்றின் மேல் ‘மீயா மீயா’ என கத்தியவாறு கறுத்த பூனையொன்று ஓடிவந்து படுத்துக் கொண்டது. பக்கத்து அறையில் ஒரு ஜீவனின் உயிர் கொஞ்சம் கொஞ்சம் போய்க் கொண்டிருந்தது. முற்றத்தில் தனித்து நின்ற மாமரத்திலிருந்து செத்த காகம் நிலத்தில் விழ உயரத்தில் ஒரு பருந்து வட்டமிடுகின்றது. இவர்களின் வளர்ப்பு நாய் வானத்தைப் பார்த்து ஊளைவிடுகின்றது. மகள் அர்ச்சனைக்காக பிடிங்கி வைத்த செவ்வரத்தைப் பூக்களும் மல்லிகைப் பூக்களும் செவ்வந்தி பூக்களும் அரலிப் பூக்களும் நந்தியா வட்ட பூக்களும் அர்ச்சனைத்தட்டில் வாடுகின்றன. அப் பூக்களில் வந்து அமர்ந்த வண்டு ஒன்று ஏமாற்றத்ததுடன் பறக்கின்றது. இவை எதுவும் சிவகாமியின் கண்களுக்குத் தென்படவுமில்லை, காதுகளுக்குக் கேட்கவுமில்லை.

‘ஜீப்’ வண்டி கடுகதியில் சிவகாமின் கண்களிலிருந்து மறைகின்றது. தாய்க்கு ஏதோ நாடகம் பார்த்த போல் இருக்கின்றது. இரு கரங்களினாலும் தலையில் அடித்து அடித்து “உன்ன வளர்க்க நான் பட்ட கஷ்டம் எவ்வளவு? வீடு வீடா பாத்திரம் தேச்சி வாசற் கூட்டி உன்னை படிப்பிச்சி டீச்சராக்கினனான். இண்டைக்கு கண்ட கண்ட நாய்களுக்கிட்ட பேச்சி வாங்கிறாய்” என முழங்காலில் இருந்தவாறு அழுகின்றாள். வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. வீதியால் செல்பவர்கள் எல்லோரும் வேடிக்கைப் பார்த்து செல்கின்றனர். மழைத்துளிகள் இடையிடையே விழத் தொடங்குகின்றன. ஆசிரியரின் கைப்பையும் பாடத்தி;ட்டக் கொப்பியும் பாடக் குறிப்புக் கொப்பியும் வீதியில் கிடந்து நனைகின்றன. வீதியால் நடந்து பாடசாலைக்குச் சென்ற ரஞ்சிதா ஆசிரியரின் வகுப்பு மாணவன் இவை தன்னுடை ஆசிரியருடைய பொருட்கள் என்பதை அடையாளம் கண்டு அவற்றை எடுத்து சிவகாமியிடம் கொடுத்தான். அவளின் கண்ணீர்த் துளிகள் இன்னும் அதிகம் நனைத்தன.

“என்ன அம்மா இண்டைக்கு டீச்சர் பள்ளிக் கூடத்திற்கு வறமாட்டாவா?”

“தம்பி நீ பத்திரமா போ அவள் வருவாள்”

“இண்டைக்கு, நான் தமிழ்த்தினப் போட்டியில் சிறுகதைக்கு அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்றதால், பரிசு வாங்க கொழும்புக்குப் போறன். என்னை வழி நடத்தி வளர்த்த ஆசிரியருக்கிட்ட ஆசிர்வாதம் பெற வேண்டும். கட்டாயம் பள்ளிக்கூடத்திற்கு வரச் செல்லுங்கோ பத்து மணிக்கு பஸ் புறப்படுதாம் அதிபர் சொல்லி விட சொன்னார்”

“தம்பி, மகள் கடைக்குப் போய்ட்டாள் வந்ததும் சொல்றன் எனக்கு டவுணுக்குப் போய் வர நூறு ரூபாய் காசு கடனாகக் கொடு அவள் டவுணால வந்ததும் திருப்பித் தாறன்”

பத்தாம் வகுப்பாசிரியராக கடமையாற்றும் ரஞ்சிதா ஆசிரியரின் மாணவர்களில் முதன்மை மாணவன்தான், முகுந்தன். இவன் படிப்பிலும் புறச் செயற்பாடுகளிலும் மாதா பிதா குரு பக்தியிலும் தலை சிறந்தவன். இவனின் தந்தை விறகு வியாபாரியாக துவிச்சக்கர வண்டியில் வீடு வீடாக கடை கடையாக வலம் வருவார். பள்ளிக்கூட வாசலே அறியாத தாய், இவனுக்கு அடுத்துப் பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுடன் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் போராடினாள். தந்தையின் உழைப்பில் முகுந்தனை அந்த குடும்பத்தினால், படிப்பிக்க முடியவில்லை. ரஞ்சிதா ஆசிரியர், அவனது படிப்புச் செலவை முழுமையாக பொறுப்பேற்றிருந்தாள். இந்த விடயம் அவனுக்கும் ஆசிரியருக்கும் மட்டுமே தெரியும். முதற் தடவையாக ஆசிரியரின் வீட்டுக்குள் சென்ற முகுந்தன் வீட்டையும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பாவையும் இன்றோ நாளையோ என்று இருக்கும் அம்மாவையும் பார்த்துத் திகைத்துப் போனான். ஆசிரியரின் தாய் பணம் கேட்டது அவனைத் திகைப்புடன் இன்னும் தூக்கிவாரிப் போட்டது. தனக்குக் கொழும்புக்குப் போவதற்கு நேற்று ஆசிரியர் கொடுத்த முந்நூறு ரூபாயில் நூறு ரூபாயைத் தனது சட்டைப் பையிலிருந்து மெதுவாக இழுத்து, மௌனம் மீது காதல் கொண்டவன் போல அந்த ஏழைச் சிறுவன், ஏழைத்தாயிடம் கொடுத்துவிட்டு விடைபெறுகின்றான். அன்றைய தினம் ஆசிரியரின் ஆசிர்வாதம் பெறாமல் தனது பயணத்தைத் தொடர்ந்தது அவனுக்கு யானைக்காதுக்குள் கட்டெறும்பு புகுந்ததைப் போல கவலையையும் வேதனையையும் வாட்டி வதக்கின. இருந்தும் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். மேடையில் பரிசு பெறும் போதும் தனது குருவைப் பார்க்காமல் வந்துவிட்டேனே என்ற ஏக்கம் அவன் மனத்தில் நிழலாடியது. இவனை வறுமை வாட்டிய போதும் கல்வியை நேசித்தான். அதுவே இவனுக்கு எதிர் கால ஆயுதமாகும் என்பதை அறியத் தவறவில்லை.

நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஆசிரியைப் பதற்றத்துடன், கூண்டில் ஏறினாள். எதிர் கூண்டில் அவரது வகுப்பு மாணவன் தனிஷ் தலையில் காயத்திற்குப் பத்துக் கட்டியவாறு கபடப் புன்னகையுடன், குனிந்த தலை நிமிராதவாறு ஏறினான். காவல்துறையினரிடம் ‘நான் அப்படி ஆளில்லை’ என கெஞ்சி மன்றாடியும் காவற்துறையினர் எதையும் நம்பாது இரவு முழுவதும் காவல் நிலையத்தில் கூண்டில் அடைத்து வைத்து, கலியாணம் ஆகாத பெண் ஆசிரியை என்று கூட யோசிக்காமல் மாற்று ஆடைக் கூட கொடுக்காமல் ஆண் காவற்துறையினரும் பெண் காவற்துறையினரும் மாறி மாறி தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். இடையிடையே மதுபோதையில் வந்த காவற்துறையினர் சிலர் ஆசிரியையைத் தப்பான கண்ணோட்டத்தில் நோக்கியதுடன், துஷ்பியோகத்தில் ஈடுபடவும் எத்தனித்தனர்.

நீதி மன்றத்தில் சிறிய நேரம் நிசப்தம் நிலவுகின்றது. நீதிபதி உள்ளே வந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். எல்லோரும் எழுந்து நின்றனர், அமர்ந்தனர், மாணவர் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்ததும் நீதிபதி எதுவும் கதைக்காமல் ஆசிரியர் மீது நாற்பத்தைந்து நாள் சிறைத்தண்டனையும் ஐம்பதாயிரம் ரூபாய் நஸ்ட ஈடும் ஒரு வருடத்திற்கு ஆசிரியர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனவும் நீதிபதி விசாரணை எதுவும் நடத்தாமல் தனது தீர்ப்பை வரைந்து செப்பினார். “இல்லை நான் அப்படியில்லை, இந்த மாணவன் ஏதோ காரணத்திற்காக என் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றான். நீதிபதி அவர்களே! தீர விசாரணை செய்து தீர்ப்பை எழுதுங்கள்” என கெஞ்சினார் ஆசிரியர். இதை நீதிபதியோ, வழக்கறிஞரோ செவி சாய்த்துக் கொள்ளவில்லை.

சிறுவன் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு, தான் பெற்றோரிடமிருந்து தப்பிக்கொள்ள எதுவும் அறியாத அப்பாவி ஆசிரியரை சிக்கிலில் சிக்கவைத்தான் தனிஷ். இலங்கையில் காவல்துறையினரும் நீதித்துறையினரும் இப்படி கண்மூடித்தனமான தீர்மானங்களை நான் என்ற ஆணவத்தில் எடுத்ததால்தான், சமூக அக்கறை கொண்ட எத்தனையே மனிதர்கள் தங்களின் கடமைகளைச் சரிவர ஆற்றாமல் தானும் தன்பாடுமாக வாழ்கின்றனர். விசாரணையில்லாமல் காவற்துறையாலும் நீத்துறையாலும் அதிபர், ஆசிரியர் செய்யாத குற்றத்திற்காக சிறைகளில் வாடுவதால், மாணவர் மத்தியில் குரு பக்தி குறைவடைவதுடன், கல்வியும் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைகின்றது, மாணவர்கள் சிலரது தவறான செயற்பாட்டினால், கல்விச் சமூகம் பாதிப்படைகின்றது.

இன்றைய சமூகத்தில், குறிப்பாக இலங்கையில் மிகவும் கேவலமான தொழிலாக ஆசிரியர் தொழில் கருதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாட்டில் மட்டுமே ஆசிரியர்கள் குறைந்த கல்வி தரத்தில் உள்ளனர் என்பதோடு, குறைந்த வேதனமும் பெறுகின்றனர். ஆசிரியர் புனிதமானவர். இது ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஆசிரியர் தொழிலாகவும் சேவையாகவும் கருதப்பட வேண்டும். இலங்கையில் கல்விச் சேவை ஆணைக்குழுவினால், குறிப்பிடப்படும் கல்வித் தகைமைகள், தொழிற் தகைமைகள், விசேட தத்துவங்களை எல்லா ஆசிரியரும் பெற்றுள்ளனரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. ‘புரளும் கல்லில் பாசி படியாததைப் போல ஆசிரியர்கள் புதிய விடயங்களை தேடிய வண்ணமே இருக்க வேண்டும். இன்று ஆசிரியர்கள் சிலர் தொழிலாக மட்டும் கருதுகின்றனர். இளந்தலைமுறையினரின் எதிர்கால வாழ்கைச் சிக்கல்களுக்கு அவர்கள் எதிர் கொள்ளக் கூடிய ஆளுமையை அளிக்கத்தக்க வகையில் கல்வி கொடுக்கப்பட வேண்டும். இன்று கல்வி அவ்வாறு இல்லாமல் தொழிலாகவும் வியாபார பொருளாகவும் மாறியுள்ளதால், சமூக சீரழிவு அதிக அளவில் மலிந்துள்ளது. இந்த நிலைமையை மாற்ற புதிய சட்டங்கள் படைக்கப்பட வேண்டும். அறிந்து கொள்ளக் கற்றல், ஆற்றுவதற்குக் கற்றல், வாழ்வதற்குக் கற்றல், ஆவதற்குக் கற்றல் இந்த நான்கும் இன்று கல்வியில் இல்லை என்றே கூறவேண்டும்.

தனிஷ், பாடசாலை நிறைவு பெற்றதும் நிதமும் பாடசாலைக்கு அண்மையில் உள்ள ஐந்து சந்தியில் ஓர் ஆட்டோவில் குந்தியிருப்பதையும் அந்த ஆட்டோக்காரனிடம் சேர்ந்து பல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்ததான். பாடசாலையில் சகபாடிகளுடன் சரியான உறவையும் பேணவில்லை. ஆசிரியர் அதிபருடன் அவ்ளவாக உரையாடுபவனும் அல்லன். அதிபர் இவனின் பெற்றோருக்குப் பல தடைவை தெரிவித்த போதும் அவர்கள் அவனின் சுபவம் அப்படித்தான் என்று அதிபருடன் முரண்பாட்டை வளர்த்தனர். இதுவும் அவனைத் தன்னிச்சையாக செயற்பட வழியமைத்துக் கொடுத்தது. இம் மாணவனின் தவறான வழி நடத்தைக்கு எது காரணம்? குடும்பமா, சமூகமா, பாடசாலை சமூகமா, சட்டமா, காவற்துறையா, நீதித்துறையா, வைத்தியத்துறையா?

தனிஷின் குடும்ப நிலையைப் பொறுத்த வரையில் யாழ் வைத்தியசாலையில் தாய் சிரேஷ்ட தாதியாகவும் தந்தையார் சிரேஷ்ட தொழிநுட்பவியலாளராகவும் கடமையாற்றினர். வறுமை என்றால் என்ன என்பதைக் கண்டறியாத வீடு. வீட்டு வேலையெல்லாம் வேலைக்காரியே கவனித்து வந்தாள். பெற்றோர் வேலை வேலை என்று தினமும் ஓடியமையால், தனிஷ் எந்த கண்டிப்பும் இன்றி மேய்ப்பாரற்ற மந்தை போல திரிந்தான்.

ஒரு சமயம் வழமை போல பாடசாலை நிறைவு பெற்றதும் சந்திக்குச் சென்றான். அன்றைய தினம் கஞ்சா குடிப்பதில் இருவருக்கும் ஏதோ வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, இறுதியில் கை கலப்பில் முடிந்தது. தனிஷின் தலை உடைந்து இரத்தம் வழிந்தோடியது அவ்விடத்தை விட்டு ஓட்டமும் நடையுமாக வீடு வந்த தனிஷ் அவசர அவசரமாக பாடசாலை சீருடையைக் களைந்து விட்டு, வீட்டு ஆடைகைளை அணிந்துகொண்டான். அவனது தலையில் இரத்தம் வழிந்தோடுவது நிற்பதாக தெரியவில்லை. இவனது அறைக்கு மதிய உணவுடன் வந்த வேலைக்காரி, தனிஷின் தலையில் இருந்து இரத்தம் வடிவதைக் கண்டு பதைப்பதைத்து அவனின் பெற்றோருக்குத் தொலைபேசி மூலம் அறிவித்தாள்.

தாயும் தகப்பனும் வேலை இடத்திலிருந்து லீவு பெற்றுக்கொண்டு வீடு நோக்கி மின்னல் வேகத்தில் வந்தனர். இரத்தம் வழிந்தோடிய வண்ணமே இருந்தது. வேலைக்காரி தடுமாற்றத்தில் சாப்பாட்டுக் கோப்பையை ‘பளீர்’ என சப்தத்துடன், தவறுதலாக கீழே விழுத்தியதும் எஜானியின் வாய் “போடி சனியன் பொட்டில்லாத உண்ட மூஞ்சில விடிய காத்தல முழிச்சதாலதான் இப்படி தரித்திரியம்” என படபடத்தது. வேலைக்காரி தனது மகளின் படிப்பபை எண்ணி வந்த கோபத்தைத் தனக்குள் பொசுக்கிக்கொண்டாள். பல்கலைக்கழத்தில் படிக்கும் தனது மகளுக்கு, வேலைக்காரி மாதாந்தம் ஒரு தொகைப் பணம் செலவுக்கு அனுப்புவாள். அப் பணம் வீட்டு வேலை செய்து, மாடாக உழைத்து மிச்சம் பிடித்ததே. உலகத்தில் யாருக்கும் எதுவும் எளிதில் கிடைப்பதில்லை. எளிதில் கிடைத்தால் அது நிலைப்பதுமில்லை. தேவையானது தேவையானவரிடம் இல்லை, தேவையற்றது தேவையானவரிடம் உண்டு. இது உலக நியதி.

“என்ன மகனே நடந்தது. விடியப் போகேக்க நல்லாதானே போனாய். உனக்குப் பள்ளிக்கூட செலவுக்கு காசும் கொடுத்து அனுப்பினே. இப்ப இப்படி இரத்த வெள்ளமாய் வந்து நிற்கிறாய்” என தனிஷின் தாய் பொரிந்தாள்.

தனிஷ் நடந்த உண்மையைக் கூறினால், தனக்கு அடி விழும் என பயந்து உண்மையை மறைத்து, “இண்டைக்கு வீட்டுப் பாடம் செய்யவில்லை, அதால வகுப்பு டீச்சர் அடித்துப் போட்டார்” என லாவகமாக பதில் சொல்லி மழுப்பினான்.

“அப்படியே டொக்டரிக்கிட்டயும் சொல்லு, இந்த டீச்சர்மாருக்கு நான் ஒரு பாடம் படிப்பிக்கிறன் பாரு, அரசாங்க சம்பளத்தை வாங்கிக்கிட்டு சத்தம் போடாம படிப்பிக்கிற வேலையை மட்டும் பாக்கிறதுதானே, சும்மா பிள்ளைகளைப் போட்டு அடிக்கிறது. அவர்கள் எடுக்கிற சம்பளத்திண்ட திறத்தில” என தனிஷின் தகப்பன் படபடத்தான்.

தனிஷின் தலையில் சிறிதாக அடிபட்ட காயத்திற்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்தினால், பெரிய பாதிப்பு இலலை. சிறிய வெடிப்பே. இரத்தம் கூடுதலாக வெளியேறியுள்ளது. அது பெரிய தாக்கமில்லை. பெற்றோருக்கு சந்தோஷத்தை அள்ளி வீசினாலும் ஆசிரியரை பழிவாங்கும் படலம் தணியவில்லை, படர்ந்தது.

மருத்துவரின் மருத்துவ அறிக்கையில் ‘ஆசிரியர், மாணவனுக்கு அடித்தே காயப்படுத்தியுள்ளார்’ என பதியப்பட்டுள்ளது. காவற்துறையினரும் அந்த அறிக்கையை ஒத்தே அந்த மாணவனிடமிருந்து வாக்கு மூலத்தைப் பெற்று, நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். அவரும் எந்த விதமான குறுக்கு விசாரணையும் இன்றி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சமூகத்தை மாற்ற வேண்டிய அதிகாரிகளே! சமூக சீரழிவுக்கு உடந்தையாக இருப்பதை இலங்கையில் சட்டம் உணரும் மட்டும் எந்த சமூக சட்ட விரோத செயலையும் ஒழிக்க முடியாது. தனிஷ் இறுமாப்புடன், வழமை போல பாடசாலைக்குச் சென்றான். அவனைக் கண்டு கொள்பவர் யாருமில்லை. ஆசிரியரின் தண்டனைக் காலம் முடிந்து விட்டது. ரஞ்சிதா ஆசிரியர் இப்போது தனது பெற்றோரின் படத்திற்குத் தினமும் காலைப் பொழுதில் இரண்டு பூக்களில் அஞ்சலி செலுத்தி விட்டு, கட்டாய தண்டனை இடமாற்ற காரணமாக தூர பாடசாலையொன்றில் தனது வழமையான பணிக்குச் செல்கின்றாள். முன் இருந்த ஆசிரியத்துவம் இப்போது அவரிடம் குறைவடைந்துள்ளது. காவற்துறை – நீதித்துறை – வைத்தியத்துறை – சட்டத்துறை இவற்றால், ரஞ்சிதா போன்ற ஆசிரியர்கள் வஞ்சிக்கப்படுவதால், ஆசிரியத்துவம் நாளுக்கு நாள் அழிக்கப்படுகின்றது.

ரஞ்சிதா ஆசிரியரின் முதன்மை மாணவன் முகுந்தன் வைத்தியனாக வந்தும் இன்னமும் நம்மவில்லை ‘ரஞ்சிதா டீச்சர்தான் தனிஷை அடிச்சிருப்பார்’ என்று.

ரஞ்சிதா ஆசிரியரின் இறுதி மாணவன் தனிஷ் பெரிய ரவுடியாக வந்தும் இன்னமும் உண்மையை சொல்லவில்லை ‘ரஞ்சிதா டீச்சர் தன்னை அடிக்கவில்லை’ என்று.

ரஞ்சிதா ஆசியரின் பணியில் முதல் தடை ஏற்பட்டாலும் இப்போது சீராக செல்கின்றது.

முன்னையது குரு பக்தி, பின்னையது குரு நிந்தை, மற்றையது குருத்துவம்.

புயல் பெ.ஸ்ரீகந்தநேசன், இலங்கை (எழுத்தாளர், ஆய்வாளர், ஆசிரியர்)

Leave a Reply