ஆசியாவின் மிகப்பெரிய சுடுமண் சிற்பங்கள்

2
433

இரத்தின புகழேந்தி

ஆசியாவின் மிகப்பெரிய சுடுமண் சிற்பங்கள் தமிழ் நாட்டில் உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் இங்குதான் அத்தகைய சிற்பங்கள் உள்ளன. பண்ருட்டியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் அமைந்துள்ளது “சேமக்கோட்டை” எனும் சிற்றூர். ஊருக்கு மேற்கே சாலையின் தென்புறம் ஒரு அய்யனார் கோயில் உள்ளது. அக்கோயிலின் தென்புறம் பாழடைந்த நிலையில் ஒரு யானை, இரண்டு குதிரை சிலைகள் உள்ளன. அவை மிகவும் பழயன என்பதனால் அதை அப்படியே விட்டுவிட்டு கோயிலின் முன்பு புதிதாக சிமெண்ட்டினால் குதிரை சிலை செய்து, அதற்கு வண்ணமடித்து பராமரித்து வருகின்றனர் அவ்வூர் மக்கள்.

அந்த பழய சுடுமண் சிற்பங்கள் மூன்று தலைமுறைகளுக்கு முன்பு செய்யப்பட்டவை என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கின்றர். ஒரு முறை அவ்வூருக்கு வந்த கலை இலக்கிய திறனாய்வாளர் இந்திரன் இவை மிகவும் பழமையான சுடுமண்சிற்பங்கள், ஆசியாவிலேயே பெரிய சுடுமண்சிற்பம் இவையாகத்தான் இருக்கும் என்றாராம். நேரில் பார்த்த பிறகுதான் இந்திரன் அவர்களின் கூற்றிலுள்ள உண்மை புரிந்தது.

நம் முன்னோர்கள் சுடுமண் சிற்பக்கலையிலும் கைதேர்ந்தவர்களாக விளங்கியுள்ளனர் என்பதை உணரமுடிந்தது.அதற்கான இலக்கியச்சான்றுகள் நம்மிடம் இருக்கின்றன.

மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க (மணிமேகலை 21:125-6)

நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம்
மண்மாண் புனைபாவை யற்று (திருக்குறள் 407)

சுடுமணோங்கிய நெடுநகர் வரைப்பின் (பெரும்பாணாற்றுப்படை 405)

ஆகிய பாடல்கள் மூலம் தமிழர்களிடையே மண், சுடுமண் சிற்பங்கள் செய்யும் வழக்கமிருந்ததை அறிய முடிகிறது.

இச்சிற்பங்களில் பல சிறப்பம்சங்களையும், நுட்பமான வேலைப்பாடுகளையும் சற்று உற்று நோக்கினால் கண்டுகொள்ளலாம். இவ்வளவு பெரிய சிற்பங்களைச் சுடுவதற்கு நம் முன்னோர்கள் கையாண்ட தொழில் நுட்பம் என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கையில் வியப்புதான் மிஞ்சுகிறது. குதிரையின் கழுத்தில் கட்டியிருக்கும் மணி, கயிறு ஆகியவற்றையெல்லாம் மிக நுட்பமாகவும், கவனமாவும் செய்துள்ள சிற்பியின் கைவண்ணம் அவரை பிறப்புக்கலைஞராகவே நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

யானையின் மீது அமர்ந்திருக்கும் இரு மனித உருவங்கள் கீழே தனியே செய்து ஒட்டப்பட்டதா அல்லது யானையோடு சேர்த்தே செய்யப்பட்டதா எனும் அய்யங்களைப் பார்ப்போர் மனதில் நிச்சயம் தோற்றுவிக்கும். குதிரையின் பற்கள், கடிவாளம்,சேணம் ஆகியவை துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு சிறப்புமிக்க இச்சிற்பங்கள் நாட்டுப்புறக் கலைஞர்களால் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி மரபுவழித் தொழில்நுட்ப அறிவினால் உருவாக்கப்பட்டவை. மூன்று தலைமுறைகளுக்குப் பிறகும் முற்றிலும் சிதைந்து விடாமல் இயற்கைச்சீற்றங்களைத் தாங்கிக் கொண்டு இத்தனையாண்டுகள் நிலைத்து நிற்கின்றன.

இச்சிற்பங்களை இப்படியே விட்டுவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் சிததிலமடைந்து அழிந்து போக வாய்ப்புள்ளது. பூமிக்கு அடியில் புதையுண்டுகிடக்கும் தொன்மையான நாகரிகச்சின்னங்களை தோண்டியெடுத்து பாதுகாக்கும் நம் தொல்பொருள் ஆய்வுத்துறையினர், பூமிக்குமேலே நம் கண்ணெதிரே அழிந்துகொண்டிருக்கும் இதுபோன்ற கலைப்பேழைகளையும் காப்பாற்ற வேணடும்.

மன்னர்களால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அரசின் கவனத்தைப்பெற்று பாதுக்காக்கப்படுவதைப்போல் மக்களால் உருவாக்கப்பட்ட எளிய கலைப்படைப்புகளும் பாதுகாக்கப்படவேண்டியவையே.

2 COMMENTS

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Leave a Reply